ஈரானில் பெண்கள் போராட்டம் பிரியங்கா சோப்ரா ஆதரவு

லண்டன்: ஈரானில் நடைபெறும் பெண்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரான் போராட்டத்தைத் தொடர்ந்து உலகநாடுகளைச் சேர்ந்த பல பெண்கள் தங்களது கூந்தலை வெட்டி, அதை இணையத்தில் வெளியிட்டு ஈரான் பெண்களது போராட்டத்துக்கு வலுசேர்த்தனர். இந்த எதிர்ப்புக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் சுவீடன் எம்.பி, கடந்த புதன்கிழமை, ஈரான் பெண்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில், ‘பெண்கள், வாழ்வு, விடுதலை’ என்று முழக்கமிட்டு தன் முடியை வெட்டிக் கொண்டார்.

இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘திணிக்கப்பட்ட அமைதிக்கு பிறகான குரல்கள் எரிமலைபோல் வெடிக்கும். அவற்றைத்  தடுக்க முடியாது. உங்களது (ஈரானிய பெண்கள்)  தைரியத்தை பார்த்து வியக்கிறேன். உங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து, ஆணாதிக்க சமுதாயத்தை எதிர்த்து மற்றும் உங்கள் உரிமைக்காக போராடுவது எளிதல்ல. நாம் அனைவரும் அவர்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும். மேலும் அவர்களுடன் இணைய வேண்டும். நான் உங்களுடன் இருக்கிறேன். பெண்கள், வாழ்க்கை, விடுதலை’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: