திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக கிளை கழகங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பேரூர் கழகம் மற்றும் மாநகர வட்ட கழக தேர்தல் நடந்தது. அதன் தொடர்ச்சியாக ஒன்றிய, நகர, மாநகர பகுதிகளுக்கான தேர்தலும், பின்னர் மாநகர கழகங்களுக்கான தேர்தலும் நடைபெற்று முடிந்தது.இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு-செயற்குழு உறுப்பினர்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை மாவட்ட வாரியாக நடைபெற்றது.

தொடர்ந்து திமுகவில் கட்சி ரீதியாக உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்கள் உள்பட மாவட்ட அமைப்பு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தென்காசி வடக்கு மாவட்ட தேர்தல் முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று திமுக பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். இதைத் தொடர்ந்து திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கைகுழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முறைப்படி வேட்புமனுத் தாக்கல் செய்தார். திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக தேர்வாகிறார். அதனை தொடர்ந்து பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

Related Stories: