சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை உள்பட 8 மாவட்டங்களில் மண்ணில்லா சாகுபடி, செங்குத்து தோட்டம் அமைக்க ரூ.15 ஆயிரம் மானியம்: பொதுமக்கள் விண்ணப்பிக்க அரசு அழைப்பு

சென்னை: மண்ணில்லா சாகுபடி, செங்குத்து தோட்டம் அமைக்க ரூ.15 ஆயிரம் மானியத்துக்கு ஆர்வமுள்ள பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: நகர்ப்புறங்களில் வீட்டிற்குத் தேவையான கீரைகள், கொத்தமல்லி, புதினா, வெங்காயம், முள்ளங்கி போன்றவற்றை வளர்ப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு 40 ச.அடி பரப்பில் செங்குத்துத் தோட்டம் அமைக்க நடப்பாண்டில் முதற்கட்டமாக சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சேலம், திருவள்ளூர், செங்கல்பட்டு  மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நகரங்களில் 250 அலகுகள் அமைப்பதற்கு அலகு ஒன்றுக்கு 50 சதவீதம் பின்னேற்பு மானியமாக ரூ.15,000 வீதம் மொத்தம் ரூ.37.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  

மேலும், நீரியல் வளர்ப்பு எனப்படும் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் மண்ணிற்குப் பதிலாக கனிம ஊட்டச்சத்து நிறைந்த நீர்ம வளர்ப்பு ஊடகக் கரைசலுடன் மெருகேறிய பளிங்கு உருள்மணிகள் அல்லது கூழாங்கற்கள், தென்னை நார்க்கழிவு  போன்றவற்றைப் பயன்படுத்தி கீரை வகைகளை சாகுபடி செய்யலாம். ஹைட்ரோபோனிக்ஸ் அலகானது என்எப்டி சேனல், துருப் பிடிக்காத எஃகினாலான தாங்கும் அமைப்பு, 40 வாட் நீர்மூழ்கி மோட்டார், பெர்லைட் கலவை, மூன்று மாதத்திற்கான ஊட்டச்சத்து, 80 வலை அமைப்பிலான தொட்டிகள், கார அமில நிறங்காட்டி மற்றும் விதைகள் போன்ற கூறுகளை உள்ளடக்கியதாகும். ஆர்வமுள்ள பொதுமக்கள் இவைகளை அமைத்து பின்னேற்பு மானியம் பெற www.tnhorticulture.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: