நிலத்தை மனையாக பதிவு செய்தால் கிரிமினல் நடவடிக்கை ஓஎஸ்ஆர் மனைகளில் எதற்கு இழப்பீடு வழங்கலாம்: நில நிர்வாக துறை ஆணையர் சுற்றறிக்கை

சென்னை: தமிழக நில நிர்வாகத் துறை ஆணையர், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: முறையாக உள்ளாட்சி பெயருக்கு ஒப்படைக்கப்பட்ட மனை பிரிவில் இருந்து, கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு, முழுமையான இழப்பீடு வழங்கலாம். இத்தகைய மனைப் பிரிவுகளில், ஓ.எஸ்.ஆர் நிலங்களை கையகப்படுத்தும்போது, அதற்கு இழப்பீடு வழங்க வேண்டாம். மனைப்பிரிவில் ஓ.எஸ்.ஆர் ஆக ஒதுக்கப்பட்டு, உள்ளாட்சியிடம் ஒப்படைக்காமல் மனையாக பதிவு செய்யப்பட்ட நிலங்கள் விஷயத்தில், சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிலத்தை இழப்பீடு ஏதும் இன்றி, சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்க, வருவாய் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முறையாக அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில், உள்ளாட்சியிடம் ஓ.எஸ்.ஆர் நிலம் ஒப்படைக்கப்படாத நிலையில், மனையின் உரிமையாளருக்கு முழு இழப்பீடு வழங்கலாம். வரன்முறை செய்யப்பட்ட அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளில், உள்ளாட்சியிடம் ஒப்படைக்கப்படாமல் இருக்கும் சாலை, ஓ.எஸ்.ஆருக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை இழப்பீடு இன்றி கையகப்படுத்தலாம். வரன்முறை செய்யப்பட்ட அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளில், ஓ.எஸ்.ஆர் ஆக ஒதுக்கப்பட்டு, தனியார் பெயரில் மனையாக பதிவு செய்யப்பட்ட நிலங்களை, இழப்பீடு இன்றி கையகப்படுத்தலாம். அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளில், கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு, நிர்ணயிக்கப்பட்டதை விட, 33.33 சதவீதம் குறைவாக இழப்பீடு வழங்கலாம்.

அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளில் ஓ.எஸ்.ஆர் ஆக ஒதுக்கப்பட்டு, உள்ளாட்சியிடம் ஒப்படைக்காமல் மனையாக பதிவு செய்யப்பட்ட நிலங்களை இழப்பீடு இன்றி கையகப்படுத்தலாம். மனை மேம்பாட்டாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளில், பள்ளிகள், மருத்துவமனை, சமுதாயக்கூடம் உள்ளிட்ட பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களுக்கு. உரிய இழப்பீடு வழங்கலாம். இதில், ஓ.எஸ்.ஆர் ஒப்படைக்கப்படாத மனைப்பிரிவு எனில் இழப்பீட்டில், 33.33 சதவீத தொகை குறைக்கப்பட வேண்டும். இந்த சுற்றறிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

Related Stories: