அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதல் வழக்கு; இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களின் முன்ஜாமீன் நிபந்தனை தளர்வு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக பதிவான வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்தி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ம் தேதி ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே தகராறு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் மீது கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக தடுத்தல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ஈ.பி.எஸ். தரப்பு ஆதரவு தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி, தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக் உள்ளிட்ட 37 பேர், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் 27 பேர் என 64 பேர்  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இரு தரப்பை சேர்ந்த 64 பேரும் சிபிசிஐடி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வழங்கினார்.

இந்த நிபந்தனைகளை தளர்த்தக்கோரி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 64 பேரும் தாக்கல் செய்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டார்.

Related Stories: