மீஞ்சூர் பேரூராட்சியில் மக்களை தெறிக்கவிடும் தெருநாய்கள்

பொன்னேரி: மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே சாலையில் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் உள்பட வயதானவர்களை தெருநாய்கள் விரட்டி சென்று பயமுறுத்தி வருகின்றனர். மீஞ்சூர் பேரூராட்சியில் காவல் நிலையம் அருகே வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் 55 ஊராட்சிகளை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக நாள்தோறும் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுக்கவும், குறைகளை சொல்லவும் வந்து செல்கின்றனர். மேலும், இந்த சாலை வழியே பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் அதிகளவில் சென்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் எந்நேரமும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டிருக்கும்.

இந்நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சுற்றி திரியும் தெருநாய்கள், அவ்வழியே நடந்து செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் உள்பட வயதானவர்களை விரட்டி சென்று கடிக்க முற்படுகின்றன. இதில் பயத்துடன் ஓடும் பலர் கால் தடுமாறி கீழே விழுந்து அடிபட்டு வருகின்றனர். அந்த தெரு நாய்கள் சாலையில் கூட்டமாக சுற்றி திரிவதால், அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.

அந்த தெரு நாய்கள் கடித்ததில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்பட அப்பகுதிக்கு சென்று வருவதற்கு அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். எனவே, இந்த தெருநாய்களை உடனடியாக அகற்ற பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: