செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நீலமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெற்பயிரை மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது அறுவடை சீசன் களைகட்டி உள்ளது. இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய, இங்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட கலெக்டரிடம் கிராம மக்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், நீலமங்கலம் கிராமத்தில் நேற்று குறுவை காலகட்டத்துக்கான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் சுமதி பரசுராமன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். கொள்முதல் நிலைய அலுவலர் ஷகில்குமார் வரவேற்றார்.
இதில் செய்யூர் எம்எல்ஏ பனையூர் மு.பாபு பங்கேற்று, நீலமங்கலம் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். இதில் லத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் சுபலட்சுமி பாபு, மாவட்ட கவுன்சிலர் ஜெயலட்சுமி மகேந்திரன், தெற்கு லத்தூர் ஒன்றிய செயலாளர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.