திண்டிவனம்: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் பிரபல ரவுடியை வெட்டி கொலை செய்த வழக்கில் 4 பேர் திண்டிவனம் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வைகோ என்கிற சந்துரு(27). பிரபல ரவுடியான இவரை கடந்த 26ம் தேதி கூடுவாஞ்சேரியில் உள்ள அவரது மாமியார் வீட்டில் இருந்தபோது 8 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சென்னையை சேர்ந்த ரவுடி சச்சினை நேற்று முன்தினம் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.