சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் சதவீதம் குறைவாக உள்ளதால், 50 முதல் 60 சதவீதம் மதிப்பெண் பெறும் வகையில் மாணவர்களின் தரத்தை ஆசிரியர்கள் மேம்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னையில் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா கலந்து கொண்டார். மேலும், தொடக்க கல்வி இயக்குனர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.