மதுரை: தென்காசி மாவட்டத்தில், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவரை இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதித்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த அவலம் நடந்துள்ளது. இதுதொடர்பாக கலெக்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தென்காசி மாவட்டம், சிவகிரியை சேர்ந்த மதிவாணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கடந்த மார்ச் மாதம் தென்காசி மாவட்டம், ராயகிரி கிராமத்தில் நண்பரின் தந்தை இறந்த நிகழ்ச்சிக்கு எனது நண்பர்களுடன் சென்றேன். நான் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்பதால், அங்கிருந்த சிலர் என்னை நீ எப்படி இங்கு வரலாம் எனக்கூறி சாதியை கூறி திட்டினர். மேலும் நான் அங்கு இருந்தால் இறந்தவரின் உடல் இறுதிச்சடங்கிற்கு யாரும் ஒத்துழைக்க மாட்டோம் என தெரிவித்தனர். இதனால் நான் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டேன். அங்கிருந்த நிர்வாகிகள் சோழராஜன், அம்மையப்பன், கார்த்திகேயன் உள்ளிட்ட சிலர் அவமரியாதையாக திட்டினர்.