அமைச்சர் சேகர்பாபு அண்ணன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி

சென்னை: அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரில் மலர் அஞ்சலி செலுத்தினர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவின் அண்ணன் தேவராஜூலு (63). இவர், ஓட்டேரி நாராயண மேஸ்திரி தெருவில் மனைவி பார்வதி, மகன்கள் லோகேஷ், தினேஷ் ஆகியோருடன் வசித்து வந்தார். டெய்லராக வேலை செய்து வந்த தேவராஜூலுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இதய பிரச்னை காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு பல்வேறு உடல்சார்ந்த பிரச்னைகளுக்காக அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கேள்விப்பட்ட ஓட்டேரி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, பல்வேறு நோயினால் அவதிப்பட்டு வந்த தேவராஜூலு மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓட்டேரி நாராயண மேஸ்திரி தெருவில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு நேற்று பிற்பகலில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள், தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி உள்ளிட்ட எம்பிக்கள் மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்எல்ஏக்கள், மாமன்ற உறுப்பினர்கள், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், நேற்று மாலை தேவராஜூலு உடல் ஓட்டேரி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related Stories: