அதிமுக பிளவால் மெத்தவும் தடுமாறி போயிருக்கிறார் எடப்பாடி அறிக்கையை பார்த்து அழுவதா, சிரிப்பதா? அமைச்சர் துரைமுருகன் கிண்டல்

சென்னை: அதிமுக பிளவால் எடப்பாடி பழனிசாமி மெத்தவும் தடுமாறி போய் இருக்கிறார். அவரது அறிக்கையை பார்த்து அழுவதா, சிரிப்பதா என்று அமைச்சர் துரைமுருகன் கிண்டலடித்துள்ளார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போதும், எதிர்க்கட்சி தலைவராக சட்டசபையில் அமர்ந்திருந்த போதும் நிதானத்தோடு தான் நடந்து கொண்டிருந்தார். அவரது கட்சியில் ஏற்பட்ட பிளவால் மெத்தவும் தடுமாறி போயிருக்கிறார், நிதானம் தவறியிருக்கிறார் என்பது அவர் வெளியிட்ட ேநற்றைய அறிக்கையின் மூலம் தெரிகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பற்றி சில வார்த்தைகளை அறிக்கையில் கொட்டியிருக்கிறார்.

ஆந்திர அரசு, ஆந்திர எல்லைக்குட்பட்ட பகுதியில் பாலாற்றின் குறுக்கே ஒரு நீர்த்தேக்கம் கட்ட போவதாக அம்மாநில முதல்வர் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அது ஒரு பொதுக் கூட்ட செய்தி தான். அதை வைத்து கொண்டு, ‘தமிழக அரசு என்ன சாதித்து விட்டது’ என்று அவசர குடுக்கையாக எதிர்க்கட்சி தலைவர் ஒரு அறிக்கை விட்டிருப்பதை பார்த்து எனக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. இப்படி தான் முன்னர் ஒருமுறை இதே கணேசபுரத்தில் அணை கட்ட போவதாக வந்த செய்தியை பார்த்து சில தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டார்கள்.

அதை தொடர்ந்து முதல்வரும், நானும் கணேசபுரம் போய் பார்த்தபோது, அப்படி ஒரு அணை கட்டுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை இவ்வரசு தீவிரமாக கண்காணித்து கொண்டிருக்கிறது. தேவையான நடவடிக்கைகளை தக்க நேரத்தில் எடுக்கும். இந்த நிர்வாக ரீதியான செயல்பாடுகள் எல்லாம் எடப்பாடியாருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. அவர் எந்த அணையையும் கட்டவில்லை. அந்தரத்தில் நீர்ப்பாய்ச்சும் அரசாங்கம் நடத்திவிட்டு போனவருக்கு நிர்வாக நடைமுறைகள் எப்படி தெரியும்? வார்த்தைகளை கொட்டுவது சுலபம். அதை திரும்ப அள்ளுவது கஷ்டம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: