வத்திராயிருப்பு அருகே தோட்டத்தில் பதுக்கிய 5 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்-3 பேர் கைது

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகே, தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 5 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பை அடுத்த கான்சாபுரம் அருகே, அத்திக்கோயில் செல்லும் வழியில் உள்ள செம்பட்டையான் காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக் (22).

அய்யனார்புரத்தை சேர்ந்தவர்கள் டேனியல் ராஜ்குமார் (22), தேவாஜ் (25). இவர்கள் மூவரும் கான்சாபுரத்தில் மலையடிவார தோட்டத்தில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக, கூமாபட்டி போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. கூமாபட்டி எஸ்ஐ கணேசன், வத்திராயிருப்பு எஸ்ஐ பிரகஸ்பதி தலைமையில் போலீசார், அந்த தோட்டத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

இதில், 5 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்து, தோட்டத்திலிருந்த மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக 6 நாட்டு வெடிகுண்டுகள் கொண்டு வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து மேலும் ஒரு நாட்டு வெடிகுண்டு பதுக்கிய இடத்தை போலீசார் தேடி வருகின்றனர். காட்டுப்பன்றிகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டதா அல்லது வேறு எதற்கும் பதுக்கி வைக்கப்பட்டதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: