டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 41 காசுகள் குறைந்து இதுவரை இல்லாத அளவாக 81.50 காசுகளாக சரிவை கண்டுள்ளது. மேலும் இந்திய பங்குசந்தையும் கடும் சரிவை சந்தித்திருக்கிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தொடர்ந்து 3வது முறையாக வட்டி விகிதத்தை கடந்த 21 அன்று உயர்த்தியது. இதனால் டாலருக்கு நிகரான பண மதிப்பு பல்வேறு நாடுகளில் சரிவை கண்டது. கடந்த புதனன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகள் குறைந்து 79.96 காசுகளாக சரிந்தது. இதேபோல் மறுநாளும், அதற்கு அடுத்த நாளும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63 காசுகள் குறைந்து 80.67 காசுகளாகவும், 39 காசுகள் குறைந்து 81.18 ஆகவும் சரிந்து வீழ்ச்சியடைந்தது. தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய தினம் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது.