போதை மறுவாழ்வு மையத்தில் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு: நான்கு பேர் கைது, மையத்துக்கு பூட்டு

பல்லாவரம்: மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் பகுதியில் ரவிக்குமார் என்பவருக்கு சொந்தமான போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு குடிப்பழக்கம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விருகம்பாக்கத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு பெற்றோரின் பேச்சை கேட்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவனுக்கு சிகிச்சை அளிக்க அவனது பெற்றோர் கடந்த சில தினங்களுக்கு முன் இங்கு கொண்டு வந்து சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த சில நாட்களில் அந்த சிறுவன் அங்கிருந்து தப்பித்து சென்று, தனது வீட்டிற்கு சென்றான். பின்னர், தனது பெற்றோரிடம் மறுவாழ்வு மையத்தில் தன்னை அடித்து, உதைத்து துன்புறுத்தியதாகவும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி காயங்கள் ஏற்படுத்தியதாகவும், ஓரின சேர்க்கையில் தன்னை ஈடுபடுத்திக்யதாகவும் தெரிவித்தான்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் இதுகுறித்து போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த மையத்தின் உரிமையாளர் ரவிக்குமார்(40), உதவியாளர் கார்த்திக்(29), ஜெகன், மோகன் ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரித்தனர். இதில், சிகிச்சை பெற்று வந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் அடித்து துன்புறுத்தி, பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து அங்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, இது குறித்த தகவல் அறிந்ததும், அந்த மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த மேலும் சிலர் அங்கிருந்து தப்பி சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மறுவாழ்வு மையத்தில் இருந்தவர்கள் வேறு மையத்திற்கு மாற்றப்பட்டு மறுவாழ்வு மையம் தற்போது பூட்டப்பட்டது. இந்த மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பிச் சென்றவர்களை தேடும் பணியும் நடந்து வருகிறது. மறுவாழ்வு மையத்தில் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: