அம்பத்தூர்: வளசரவாக்கத்தை சேர்ந்தவர் வினோதினி (19), தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர், டிரக்கிங் எனப்படும் மலையேறும் நிகழ்வுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அப்போது அம்பத்தூர் அடுத்த ஐசிஎப் காலனியை சேர்ந்த ஸ்ரீதர் (22) என்பவர் அறிமுகமானார். இவர், தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். நாளடைவில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது. இருவரும் சேர்ந்து கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி நாகப்பட்டினம் சென்று வந்துள்ளனர். இதை தொடர்ந்து காதலன் ஸ்ரீதர், வினோதினியிடம் பேசுவதை நிறுத்திவிட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தியில் இருந்த வினோதினி கடந்த மாதம் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.