8 சிறுத்தைகளை வனத்தில் விடும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வருகைக்காக 300 மரங்கள் வெட்டப்பட்டதா?... மத்திய பிரதேச வனத்துறை விளக்கம்

போபால்: மத்திய பிரதேச வனப்பகுதியில் 8 சிறுத்தைகள் விடப்பட்ட நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி வருகைக்காக 300 மரங்கள் வெட்டப்பட்டதாக வெளியான செய்தியை அம்மாநில வனத்துறை மறுத்துள்ளது. பிரதமர் மோடி தனது பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதியன்று மத்திய பிரதேச மாநிலம் குனோ வனவிலங்குகள் சரணாலயத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர்,  நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட எட்டு சிறுத்தைகளை, அந்த சரணாலயத்தில் விடுவித்தார்.

முன்னதாக பிரதமர் மோடி மற்றும் சுமார் 300 சிறப்பு விருந்தினர்களின் வருகைக்காகவும், ஹெலிபேடு அமைப்பதற்காகவும் வனப்பகுதியில் இருந்த 300க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய பிரதேச வனத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘குனோவில் ஹெலிபேட் அமைப்பதற்காக எந்த மரமும் வெட்டப்படவில்லை.

ஹெலிபேடுக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மரங்கள் இல்லை; மரங்கள் வெட்டப்பட்டதாக வெளியான செய்திகள் முற்றிலும் போலியானது. விருந்தினர்கள் தங்குவதற்காக கூடாரங்கள் ஏதும் அமைக்கவில்லை. விருந்தினர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் செசாய்புரா மற்றும் சுற்றுலா ஜங்கிள் லாட்ஜில் தங்கியிருந்தனர். குனோ தேசிய பூங்காவில் கூடாரங்கள் ஏதும் அமைக்கப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: