பல்வேறு முயற்சிகளின் காரணமாக பதிவுத்துறை வருவாய் ரூ.8,000 கோடியை தாண்டியது: அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை: பல்வேறு முன்னோடி முயற்சிகளின் விளைவாக பதிவுத்துறை வருவாய் ரூ.8,000 கோடியை கடந்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். தமிழக வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்ட அறிக்கை: பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுவரும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக ஆவணங்கள் பதிவு அதிகரித்து அதன் மூலம் அரசுக்கு வரி வருவாயும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பதிவு செய்ய வருவோரை ஆதார் எண் மூலம் சரி பார்த்தல், வரிசைக் கிரம டோக்கன் முறை, சரியான நிலமதிப்பு நிர்ணயம், மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை போன்ற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்கள் பதிவு சேவைக்காக இத்துறையை நம்பிக்கையோடு நாடுகின்றனர். அனைத்திற்கும் மேலாக கடந்த காலங்களில் நடந்த மோசடி பதிவுகளின் மீது விரிவான விசாரணை மேற்கொண்டு, போலி ஆவணப்  பதிவுகளை பதிவுத் துறையே ரத்து செய்யும் அதிகாரம் நடைமுறைப்படுத்துவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்வரும் 28ம் தேதி துவக்கி வைக்க இருக்கிறார். இந்த பல்வேறு முன்னோடி முயற்சிகளின் விளைவாக கடந்த 21ம் தேதி வரை 16,59,128 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 8,082 கோடி வருவாயாக  ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே நாளில் எட்டப்பட்ட ரூபாய் 5,757 கோடியை விட ரூபாய் 2,325 கோடி அதிகமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: