சென்னை: 2011-15ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக, செந்தில் பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 3 வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளில் மீண்டும் விசாரணை நடத்த அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் 3 வழக்குகளிலும் விரிவான விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
