சிறுவாபுரி முருகன் கோயிலில் 30வது நாள் மண்டல பூஜை: சுமார் 3மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம்

பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்த 30வது நாளை முன்னிட்டு, மண்டல பூஜை நடந்தது. இதில் சுமார் 3 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்திபெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. செவ்வாய்க்கிழமை 6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த, சிறுவாபுரி முருகன் கோவிலில்  ரூ.1 கோடி மதிப்பீட்டில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 19 ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேகம் கடந்த மாதம் 21ம் தேதி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் வெகு விமரிசையாக நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன்  கலந்து கொண்டனர்.

மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மண்டல பூஜையின் 30ம் நாளான நேற்று சிறுவாபுரியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

கும்பாபிஷேகத்தில் பங்கெடுக்க முடியாதவர்கள் மண்டல பூஜை நடைபெறும் 48 நாட்களில் கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. மேலும், மண்டல பூஜை ஒருபுறம், செவ்வாய்க்கிழமை மறுபுறம் என்பதால் பக்தர்கள் கூட்டம் தற்போது அலைமோதுகிறது. இலவச தரிசனம், ரூ.50, ரூ.100 கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோயிலுக்குள் வந்து சுமார் 3மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

புதிய வீடு கட்ட வேண்டும், திருமணத்தடை நீங்கவேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக பக்தர்கள் ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வழக்கமாகவே செவ்வாய்க்கிழமைகளில் கூட்டம் அதிகரிக்கும் சிறுவாபுரி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து மண்டல பூஜை நடந்து வருவதால் செவ்வாய்க்கிழமை பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.

Related Stories: