இடைத் தேர்தலுக்கு கட்சி வழங்கிய பணத்தை எம்பி தேர்தலில் தன் மகனுக்காக செலவழித்தவர்தான் ஓபிஎஸ்: திண்டுக்கல் சீனிவாசன் தாக்கு

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகரில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இதில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுக பிளவு பட்ட போது, தர்மயுத்தம் நடத்தி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களித்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவின் பொதுச்செயலாளராக இருக்க முழு தகுதி பெற்றவர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே.

இபிஎஸ் கையொப்பம் இட்ட உறுப்பினர் அடையாள அட்டை விரைவில் வழங்கப்படுவது உறுதி. அதிமுகவில் உழைத்தவர்கள் மட்டுமே உயர்வார்கள். காட்டி கொடுத்தவர்கள் தாழ்ந்து போவார்கள்.கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக கட்சி தலைமை வழங்கிய  பணத்தை ஓ.பன்னீர்செல்வம் ஆண்டிபட்டி தொகுதியில் முறையாக செலவழிக்கவில்லை. மாறாக நாடாளுமன்ற தேர்தலில் அவரது மகன் ரவீந்திரநாத்திற்கு செலவு செய்தார். இதனால் தான் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் தோல்வியுற்றார்.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: