கஞ்சா விற்பதில் தகராறு ரவுடி வெட்டி கொலை: 4 பேர் கைது

திருவொற்றியூர்: எண்ணூர், வ.உ.சி.நகர், 7வது தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (32). இவர் மீது கொலை முயற்சி, அடிதடி போன்ற பல்வேறு வழக்குகள் எண்ணூர் காவல் நிலையத்தில் உள்ளன. இவர், நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு  காமராஜர் நகர் 7வது தெருவில் ரயில்வே தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 6 பேர், ஜாகிர் உசேனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். இதில் தலை, முகம், கை கால்களில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த எண்ணூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, எண்ணூர் எஸ்விஎம் நகரை சேர்ந்த கிஷோர் (22), அருண் குமார் (22), ரமேஷ்குமார் (24), கார்த்திக் (எ) அட்டு கார்த்திக் (25) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா விற்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்தது தெரிந்தது. முக்கிய குற்றவாளியான பாம் ராஜேஷ், நிஜாமுதின் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

Related Stories: