கர்நாடகாவில் சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம்: பினராய் கோரிக்கையை நிராகரித்த முதல்வர் பொம்மை

பெங்களூரு: ‘சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் எந்த திட்டத்திற்கும்  அனுமதி அளிக்க மாட்டோம்’ என முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார். பெங்களூருவில் முதல்வர் பசவராஜ் பொம்மையை கேரள மாநில முதல்வர் பினராயி  விஜயன் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது  கேரள மாநிலத்தின்  கஞ்சன்காடு-கானியார் ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இரண்டு  மாநில முதல்வர்களும் விவாதித்தனர்.

இதைத்தொடர்ந்து நிருபர்களிடம் முதல்வர்  பசவராஜ் பொம்மை கூறியதாவது:

கர்நாடகா மற்றும் கேரளா இடையேயான ரயில்  திட்டங்களை அமல்படுத்துவது குறித்து விவாதம் நடத்தினோம்.  கஞ்சன்காடு-   கானியார் ரயில் திட்டத்தில் 40 கிலோ மீட்டர் ரயில் பாதை கேரள மாநிலத்திலும்   31 கிலோ மீட்டர் ரயில் பாதை நமது கர்நாடக மாநிலத்திலும் அமைகிறது.  இத்திட்டம் கர்நாடக மாநிலத்திற்கு அதிக நன்மை அளிக்காது. அத்துடன் மேற்கு  தொடர்ச்சி மலை பாதையில்  இது அமைகிறது என்பதால் சுற்றுச்சுசூழலுக்கு அதிக  பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இதற்கு அனுமதி அளிப்பது சாத்தியம்  கிடையாது.

இதுமட்டும் இன்றி  பந்திப்பூர்-நாகரஹொளே தேசிய வனவிலங்கு  சரணாலயத்திற்கு நடுவே தலைச்சேரி மற்றும் மைசூரு திட்டம் அமல்படுத்த  முடியாது என்பதையும் தெரிவித்தோம். கேரள முதல்வர் பினராயி விஜயன் தற்போது  இயக்கப்படும் இரண்டு பஸ்களுடன் கூடுதலாக இரண்டு பஸ்கள் இயக்க வேண்டும் என  கோரிக்கை விடுத்தார். இரவு நேரத்தில் இயக்கப்படும் இரண்டு பஸ்கள் தவிர  கூடுதலாக பஸ்கள் இயக்கப்படாது என்கிற முடிவடையும் அவரிடம் தெரிவித்தோம்.  

கர்நாடக எல்லையில்  சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் அனுமதி  அளிக்கப்படாது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பாஜ அரசு ஒருபோதும் சமரசம்  செய்து கொள்ளாது. இவ்வாறு முதல்வர் பசவராஜ்பொம்மை கூறினார்.

Related Stories: