விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரின் சொத்துகள் இதுவரை ரூ23,000 கோடி வங்கிகளிடம் ஒப்படைப்பு: அமலாக்கத்துறை தகவல்

மும்பை: விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரின் ரூ.23,000 கோடி சொத்துகளை சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் ஒப்படைத்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நாடு முழுவதும் பல வங்கிகளில் பல்லாயிரம் கோடி கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை நாடு கடத்தி இந்தியா கொண்டுவர சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

மல்லையாவுக்கு கடன் வழங்கிய 11 வங்கிகளின் கூட்டமைப்பு, மல்லையாவின் வாராக் கடன்களால் ரூ.6,200 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. அதேபோல் வங்கி மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் நீரவ் மோடியின் ரூ.253.62 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. கடந்த ஜூலை மாதம் ரூ. 2,650.07 கோடி மதிப்புள்ள நீரவ் மோடியின் தங்க நகைகள் மற்றும் வங்கி இருப்புகளை அமலாக்கப்பிரிவு முடக்கும் சொத்துகளுடன் இணைத்திருக்கிறது. இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள், ‘விஜய், மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோரின் மோசடிகளால் இந்திய வங்கிகளுக்கு ஏறக்குறைய ரூ. 22,858 கோடி இழப்பு ஏற்பட்டது.

இவர்கள் மூன்று பேரும் வங்கிகளில் வாங்கிய கடன் மற்றும் அதற்கான வட்டி ஈடு செய்ய இவர்களின் சொத்துக்களைக் கையகப்படுத்தி வருகிறோம். அந்த சொத்துக்கள் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் ஏலம் விடப்பட்டு, அதில் கிடைக்கும் தொகை சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் வழங்கப்படுகிறது. சமீபத்தில் நடத்திய ஏலத்தில் ரூ.8,411 கோடி திரட்டப்பட்டது. இதையும் சேர்த்து இதுவரை மொத்தம் ரூ.23,000 கோடிகளை வங்கிகளிடம் ஒப்படைத்துள்ளோம். மேலும் பல சொத்துக்களையும் கையகப்படுத்த நடவடிக்கை தொடர்கிறது’ என்று கூறின.

Related Stories: