இலங்கை கடற்படைக்கு எதிரான வழக்கை விசாரிக்க முடியுமா?: உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை கடற்படைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் கே.கே ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, ‘இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடிவிக்கபட்டார்களா?’ என நீதிபதி கேட்டார். அதற்கு, ‘86 மீனவர்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. தமிழக மீனவர்களை இந்திய கடல் எல்லைக்குள் வந்து இலங்கை கடற்படை தாக்கி கைது செய்கிறது. எனவே, இதற்கு தீர்வு காண வேண்டும்,’ என மனுதாரரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதை கேட்ட நீதிபதிகள், ‘இலங்கை கடற்படை விவகாரம் நீதிமன்ற விசாரணை வரம்புக்குள் வருமா?’ என கேட்டனர். ‘இந்திய கடல் எல்லைக்குள் இந்த சம்பவங்கள் நடப்பதால் உச்ச நீதிமன்றம் இதில் தலையிட முடியும்,’ என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்த வழக்கில் உரிய தரவுகளுடன் பதிலளிக்க வேண்டியுள்ளது. எனவே, அது தொடர்பாக உரிய அமைப்பை கேட்டு தெரிவிக்கிறோம்,’ என கூறினர். இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: