கிண்டி தேசிய பூங்காவில் உள்ள நீர்நிலைகள் முழுமையாக நிரம்பியுள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை: அதிகாரிகள் தகவல்

சென்னை: கிண்டி தேசிய பூங்காவில் உள்ள நீர்நிலைகளில் தற்போது முழுமையாக நீர் நிரம்பியுள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.கிண்டியில் தேசிய சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இந்த சிறுவர் பூங்காவில் வனவிலங்குகள், பறவைகள், பாம்பு வகைகள், 100க்கும் மேற்ப்பட்ட மூலிகை வகைகள் உள்ளது. இந்த சிறுவர் பூங்காவிற்கு சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வார நாட்களில் 500 பேர் முதல் 1000 பேர் வரையும், விடுமுறை மற்றும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.  

சிறுவர் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் வனஉயிரினங்களுக்கு அங்கு அமைந்துள்ள 8.84 ஹெக்டேர் பரப்பளவுள்ள  காத்தங்கொல்லையில், 2.37 ஹெக்டேர் பரப்பளவுள்ள சப்பர் ஓடை, 1.8 ஹெக்டேர் பரப்பளவுள்ள அப்பளாங்குளம், வாத்து குளம் மற்றும் போகி குளம் ஆகியவற்றில் உள்ள நீரை உயிரினங்கள், தாவரங்கள் மற்றும்  பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும் வளாகத்தில் உள்ள பணியாளர்கள் குடியிருப்புகளில் வசிப்பவர்கள், ராஜ்பவன் மற்றும் ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதிகள், குடியிருப்புகள், போன்றவற்றிக்கும் கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள நீர்நிலைகளை ஆதாரமாக கொண்டு கோடைகாலங்களில் பயன்படுத்தி வந்தனர். இதனால் கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனால் வெளியில் பணம் செலுத்தி தண்ணீர் பெற்று அதனை விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர். இதற்கிடையே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் வனத்துறை சார்பில் பூங்காவில் உள்ள குளங்களை தூர்வாரி பராமரித்து வைத்திருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழை பெய்த நிலையில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டது. இதை அடுத்து சேமித்து வைக்கப்பட்ட நீரை கடந்த கோடை காலம் முழுவதும் பயன்படுத்தப்பட்டது.இந்நிலையில் கோடைகாலங்கள் முடிந்த நிலையிலும், கிண்டி தேசிய பூங்காவில் உள்ள நீர்நிலைகள் தற்போது முழுமையாக நீர் உள்ளது.

60 சதவீதத்திற்கு அதிகமாக பெய்யும் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், இன்னும் இரண்டு மாதங்களுக்கு தண்ணீர் விநியோகத்திற்கு தேவையான நீர் உள்ளது. இதனால் கோடைக்காலங்களை சமாளிக்கும் வகையில் குளங்களில் நீர் உள்ளதால் கடந்த காலங்களை போன்று நீர் வெளியிலிருந்து வாங்கும் நிலை தற்போது இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: