திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகப் பணி முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 17ம் தேதி அடிக்கல்: தி.க. தலைவர் கி.வீரமணி பேட்டி

சென்னை: திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு, சென்னை பெரியார் திடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 17ம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளார் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழக தலைமை செயற்குழுக் கூட்டம் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்று நடந்தது. தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். இதில், துணைத் தலைவர் கலி பூங்குன்றன், பொதுச் செயலாளர்கள் துரை சந்திரசேகர், வீ.அன்புராஜ், ரா.ஜெயக்குமார், பொருளாளர் பி.குமரேசன், மாநில பிரசார செயலாளர் வக்கீல் அருள்மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ‘‘ஒன்றிய அரசு, வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் சாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து அனைத்து சமூக அமைப்புகளும் நீதிமன்றத்திலும், வீதிமன்றத்திலும் போராட வேண்டும் என்பது உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் கி.வீரமணி அளித்த பேட்டி: பெரியாரின் பிறந்தநாள் விழா சமூகநீதி விழாவாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு 2வது ஆண்டாக பெரியாரின் 144வது பிறந்தநாள் விழா வருகிற 17ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், சென்னை பெரியார் திடலில் நடைபெற உள்ள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, அன்றைய தினம் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெரியார் உலகம் பணி தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: