தேச விரோத செயல்கள் நடப்பதாக மதரசாவை இடித்த மக்கள்: வடமாநிலத்தில் தொடரும் சம்பவம்

கவுகாத்தி: அசாம் மாநிலத்தின் கோல்பாரா மாவட்டத்தில் பகியுரா சர் பகுதியில் மதரசா இயங்கி வந்தது. இதனையொட்டி வீடும் அமைந்திருந்தது. இந்த மதரசாவை வங்கதேசத்தை சேர்ந்த 2 நபர்கள் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. தகவலின்பேரில் மதரசாவின் மத குரு ஜலாலுதீன் ஷேக் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் தான் 2 வங்கதேசத்தினரை இங்கு ஆசிரியர்களாக நியமித்ததாக கூறப்படுகிறது. இவர்கள் ஜிகாதிகள் மூலமாக நாட்டுக்கு எதிராக தேசவிரோத செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. தற்போது இருவரும் தலைமறைவாகி உள்ளனர். இந்த தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் ஆத்திரமடைந்தனர். மதரசாவிற்கு எதிராக ஒன்று திரண்ட அவர்கள் அதனை இடித்து தரைமட்டமாக்கினர். மேலும் அதனோடு சேர்ந்து இருந்த வீடும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. வடகிழக்கு மாநிலத்தில் இடிக்கப்படும் நான்காவது மதரசா இதுவாகும்.

விசாரிக்க வேண்டும்: இதற்கிடையே, தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் இக்பால் சிங் லால்புராவிற்கு அசாம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எழுதியுள்ள கடிதத்தில், மதரசா இடிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: