காரைக்காலில் விஷம் கலந்த குளிர்பானம் குடித்த மாணவன் உயிரிழப்பு விவகாரம்: 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவை அமைத்தது புதுவை அரசு

புதுச்சேரி: காரைக்காலில் விஷம் கலந்த குளிர்பானம் குடித்ததால் உயிரிழந்த சிறுவனின் இறப்பு குறித்து விசாரிக்க 3 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. காரைக்கால் நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் பாலமணிகண்டன் படிப்பிலும், கலை நிகழ்ச்சிகளிலும் முதலிடம் பிடிப்பதை கண்டு பொறாமைப்பட்ட சகமாணவியின் தாய், கடந்த 3ம் தேதி பள்ளி ஆண்டு விழா ஒத்திகையில் இருந்த சிறுவனுக்கு, அவரது தாய் குளிர்பானம் கொடுத்ததாக கூறி, விஷம் கலந்த குளிர்பானத்தை வாட்ச்மேனிடம் கொடுத்துள்ளார்.

அந்த குளிர்பானத்தை குடித்த சிறுவன், வீட்டிற்கு சென்ற பின் பலமுறை வாந்தி எடுத்து, சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து மாணவனை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மாணவர் பாலமணிகண்டன் உயிரிழந்தார். மருத்துவமனையின் அலட்சிய போக்கால் மகன் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டினர். இந்நிலையில் சிறுவனின் இறப்பு குறித்து விசாரிக்க குழந்தைகள் நல தலைமை மருத்துவர் முரளி தலைமையில் மருத்துவர்கள் ரமேஷ், பாலசந்திரர் அடங்கிய குழுவை அமைத்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து மருத்துவர்கள் விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக காரைக்கால் மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் விசாரணை தொடங்கப்பட்டது. அதில், மாணவன் கடந்த 2 ம் தேதி மாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கும் பொழுது அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் எந்த சிகிச்சை அளித்தார்கள்? எதுபோன்ற மருந்துகள் கொடுக்கப்பட்டது? ஏன் உடனடியாக மாணவரை வீட்டிற்கு அனுப்பினர்? என்ற கேள்வியை முன் வைத்துள்ளனர். மட்டுமல்லாமல், அங்கு பணியில் இருந்த மருத்துவரையும் விசாரணை செய்துள்ளனர்.

இதனையடுத்து புதுச்சேரி மருத்துவமனையில் மாணவன் அனுமதிக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவில் மாணவனுக்கு எது போன்ற மருந்துகள் தரப்பட்டது? என்னென்ன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவனின் மருத்துவ ஆவணங்களையும், மாணவனின் உடற்கூறாய்வு ஆவணங்களையும் பெற்றுள்ளனர்.  இதுகுறித்த அறிக்கையை இன்று மாலை புதுச்சேரி மருத்துவத்துறை செயலாளரிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

Related Stories: