மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்ய கோரிய எஸ்.பி.வேலுமணி மனு விசாரணைக்கு உகந்ததல்ல: ஐகோர்ட்டில் அரசு வாதம்

சென்னை: டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் எப்படி வேலுமணிக்கு ஆதரவாக ஆஜராகலாம் என்றும் தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்த்தல்ல. இந்த மனுவை ஒற்றை நீதிபதி தான் விசாரிக்க வேண்டும். வேலுமணி சார்பில் ஒன்றிய அரசு வழக்கறிஞர் ராஜு எப்படி ஆஜராக முடியும். வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ள நிலையில் வருமான வரித்துறைக்காக ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ராஜு எப்படி வேலுமணிக்கு ஆதரவாக ஆஜராகலாம் என்று வாதிட்டார்.

லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, வேலுமணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதுஎன்று வாதிட்டார்.

அப்போது வேலுமணி சார்பில் மூத்த வழக்கறிஞர் ராஜு ஆஜராகி, ஒன்றிய அரசின் அனுமதி பெற்றே வேலுமணிக்காக ஆஜராகி வருகிறேன். அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த பொதுநல வழக்குடன், ஆர்.எஸ்.பாரதி குற்றவியல் பிரிவில் தாக்கல் செய்த மனுவும் சேர்த்துதான் விசாரிக்கப்பட்டன. வழக்கை அமர்வு விசாரிக்கலாம். எந்த ஆதாரமும் இல்லை என்ற ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை புறக்கணித்து விட்டு அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார். இதையடுத்து, வழக்கை ரத்து செய்யக் கோரிய வேலுமணியின் மனுவை விசாரிக்க அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபங்கள் தொடர்பான உத்தரவை நீதிபதிகள் நாளைக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: