பல்லாவரம்: குன்றத்தூர், நாலு ரோடு ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் மோகன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் ஜெகதீசன் (17). கோவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். இவர், நேற்று முன்தினம் மாலை அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் சூர்யா, யுவராஜ் ஆகியோருடன் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்று சுற்றி பார்த்துள்ளார். பின்னர், நண்பர்கள் அனைவரும் ஏரியில் குளித்தனர். நீச்சல் தெரியாத ஜெகதீசன் கரையில் அமர்ந்து குளித்து கொண்டிருந்தார். அப்போது, அவரது நண்பர்கள் ஜெகதீசனை ஏரிக்குள் இறங்கி குளிக்கும்படி வற்புறுத்தினர். நண்பர்கள் பேச்சைக் கேட்டு ஆழமான பகுதிக்கு சென்ற ஜெகதீசன், நீச்சல் தெரியாததால் அலறி கூச்சலிட்டபடி நீருக்குள் மூழ்க தொடங்கினார். இதை பார்த்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர்.