நாங்க எல்லாம் யாரு....? கூகுள் பே மூலம் லஞ்சம்; கேரள அதிகாரிகள் வசூல் விஜிலன்ஸ் சோதனையில் அம்பலம்

திருவனந்தபுரம்: கேரளாவில்  உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பெருமளவு லஞ்சம் வாங்குவதாக, லஞ்ச  ஒழிப்புத்துறை ஏடிஜிபி மனோஜ் ஆபிரகாமுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.  தற்போது ஓணம் பண்டிகை நெருங்கி வருவதால் அதிகாரிகளின் அட்டகாசம் அதிகரித்து  உள்ளது. இதையடுத்து, கேரளா  முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஒரே சமயத்தில் அதிரடி சோதனை  நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி, கடந்த 2 நாளாக சோதனை நடத்தப்பட்ட போதிலும், ஒருவர் கூட லஞ்சப் பணத்துடன் சிக்கவில்லை.

இதனால் குழம்பிய லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், அவர்களின் வங்கிக்  கணக்குகளை பரிசோதித்தபோது பேடிஎம் மற்றும் கூகுள் பே உள்பட யுபிஐ கணக்கு  மூலம் லட்சக்கணக்கில் லஞ்ச பணம் வசூலித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது  மட்டுமல்லாமல் பல அதிகாரிகளிடம் ஏராளமான ஏடிஎம் கார்டுகளும்  கைப்பற்றப்பட்டன. ஏஜென்டுகள் தங்களின் வங்கிக் கணக்கில் பணத்தை போட்டு  விட்டு, அந்த ஏடிஎம் கார்டை அதிகாரிகளிடம் கொடுத்து விடுவார்கள். அவர்கள் அந்த கார்டை வைத்து பணத்தை எடுத்து கொள்வார்கள். இதேபோல், கேரளா முழுவதும் உள்ள வட்டார  போக்குவரத்து அலுவலகங்களில் லட்சக்கணக்கில் லஞ்சம் கைமாறி இருக்கிறது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

Related Stories: