சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 2 முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அதற்கு எஸ்பி. வேலுமணி மீதான ஊழல் வழக்கில் 2 முதல் தகவல் அறிக்கைகளை ரத்துக்செய்யக்கூடாது என்று லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை ஐகோர்ட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் அரசின் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய கோரி அறப்போர் இயக்கம், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் முதலில் புகார் அளித்து இருந்தனர். மேலும், கோவை லஞ்ச ஒழிப்பு துறையினர் தங்களிடம் உள்ள ஆதராங்களின் அடிப்படையில் எஸ்பி வேலுமணி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உள்ளனர். இந்நிலையில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் (டிவிஏசி), தனக்கு எதிராக பதிவு செய்த 2 முதல் தகவல் அறிக்கைகளை (எப்ஐஆர்) ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு தாக்கல் செய்தார்.