பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே நாகாத்தம்மன் கோயிலில் 500 பால்குட அபிஷேகம் நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் 5 சுவாமிகள் வீதியுலா வந்தன. பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை சரோஜினி அம்மாள் நகரில் அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீநாகாத்தம்மன் கோயிலில் 24ம் ஆண்டு 8வது வார ஆடித்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த ஆக.22ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதையொட்டி நேற்று 500க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பெரியபாளையத்தம்மன் கோயிலில் இருந்து பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். அப்போது விநாயகர், நாகாத்தம்மன், பெருமாள் உள்ளிட்ட 5 சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி ரதத்தில் ஊர்வலமாக வந்தன. அப்போது பக்தர் ஒருவர் முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் பறவை காவடி போல தொங்கியபடி வந்து 5 சுவாமிகளுக்கும் மாலை அணிவித்தார்.