சென்னை: தமிழகத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு, டிஜிபி சைலேந்திர பாபுவின் சார்பில் ஏடிஜிபி வெங்கட்ராமன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: காவல்துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப பெட்ரோல், மற்றும் டீசல் அளவை அறிவுறுத்தியபடி நிர்ணயித்து கொள்ளுமாறு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயம் செய்துள்ள அளவை விட அதிக எரிபொருள் பயன்படுத்தினால் அவ்வாறு பயன்படுத்திய அதிக எரிபொருளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.அதிகமாக பயன்படுத்தப்பட்ட எரிபொருளுக்கு சம்பந்தப்பட்ட வாகனம் பயன்படுத்தும் அலுவலரிடமிருந்து பணம் பிடித்தம் செய்யப்படும் என்று அரசாணையில் தெரிவித்துள்ளதால், காவல்துறை வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்ச வரம்பிற்கு மிகாமல் திட்டமிட்டு எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தும்படி அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் வருடாந்திரமாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.