பிரேசிலியா: பிரேசிலில் வாழ்ந்து வந்த ஒரு பழங்குடியினத்தின் கடைசி மனிதரும் உயிரிழந்து விட்டதாக பூர்விக இன பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது. பிரேசில்- பொலிவியா எல்லையில் உள்ள ரோண்டோனியா மாநிலத்தில் உள்ள தனாரு பகுதியில், பழங்குடி மக்கள் வசித்து வந்தனர். 1970ம் ஆண்டின் தொடக்கத்தில் நிலப்பகுதியை ஆக்கிரமித்த பண்ணையாளர்களால் அவர்கள் அடித்து விரட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இதில் உயிர் பிழைத்தவர்கள் 7 பேர் மட்டுமே. ஆனால் 1995-ம் ஆண்டு மீண்டும் தாக்கப்பட்டபோது, அதில் 6 பேர் உயிரிழந்தனர். பழங்குடியினத்தில் இறுதியாக மிஞ்சியவர் தான் `Man of the Hole என்றழைக்கப்பட்ட பழங்குடி நபர்.
பள்ளங்களை தோண்டி வைத்து அதன் மூலம் விலங்குகளை வேட்டையாடியதால் அவருக்கு இந்த பெயர் வழக்கங்கப்பட்டது. அடர் வனத்தில் தனியொருவராக 26 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த அவர் மிக அரிதாகவே பிறர் கண்களுக்கு புலப்பட்டு வந்தார். கடைசியாக கடந்த 2018ம் ஆண்டு அவர் மரம் வெட்டும் காட்சியை ஆர்வலர் ஒருவர் பதிவு செய்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில் பிரேசில் பழங்குடியினத்தின் கடைசி மனிதரான அவர் உயிரிழந்துவிட்டதாக பிரேசிலின் பூர்விக பாதுகாப்பு நிறுவனமான ஃபுனய் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 23ம் தேதி காட்டின் மத்தியில் உள்ள வைக்கோல் குடிசை ஒன்றில் இருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
60 வயதான அவர் வயது முதிர்வு காரணமாகவே இருந்துள்ளதாக கூறும் ஃபுனய் அமைப்பு, இருப்பினும் அவரது உடலை தடயவியல் ஆய்விற்கு உட்படுத்த பிரேசில் காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அவர் வாசித்த குடிசையில் கிடைத்த பொருட்கள் மூலம் வைக்கோல், ஓலைகளை கொண்டு அவர் வீட்டினை கட்டியுள்ளதும், சோளம், கிழங்கு போன்றவற்றை விளைவித்தும், தேன் மற்றும் பப்பாளிப்பழங்களை உண்டு வாழ்ந்ததும் தெரியவந்துள்ளது. பிரேசிலில் தன்னார்வ பகுதியில் வசித்த கடைசி பழங்குடியினத்தின் கடைசி மனிதரும் உயிரிழந்து விட்டது பிரேசிலில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.