நடிகர் விக்ரம் நடித்து நாளை மறுநாள் வெளியாகவுள்ள கோப்ரா படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை; சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள கோப்ரா படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. செவன் ஸ்கீர்ன் ஸ்டுடியோவின் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் விநாயகர் சதுர்த்தியான ஆகஸ்ட் 31ம் தேதி உலகெங்கிலும் திரைக்கு வர உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர்  இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், நிதி ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார்.

 இந்த படத்தை அரசு மற்றும் தனியாரின் 29 இணையத்தள சேவை நிறுவனங்கள் மூலம் சட்ட விரோதமாக 1788 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, பல மாதங்கள் உழைப்பில், மிகுந்த பொருட் செலவில், பல போராட்டங்களுக்கு பிறகு படத்தை வெளியிட உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும்’ என்றார். இதையடுத்து, ‘கோப்ரா திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கப்படுகிறது. அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்க வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: