சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.37 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று ரயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மேற்கு வங்கம் நியூ ஜல்பைகுரியிலிருந்து வந்த விரைவு ரயிலில் வந்த பயணிகளை  சோதனையிட்டனர். நீலநிற பையுடன் வந்த மகாராஷ்டிராவை சேர்ந்த சங்கர் ஆனந்தராவ் (30) என்ற பயணியை சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் ரூ.20 லட்சமும், உடையில் மறைந்து வைத்திருந்த ரூ.17 லட்சமும் கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ரூ.37 லட்சத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும், ஹவாலா பணம் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.37 லட்சம் வருமான வரித்துறை அதிகாரி பாலசுப்பிரமணியனிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, ரயிலில் எடுத்து வரப்பட்ட ஹவாலா பணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: