விருதுநகர்: ஆர்எஸ்எஸ் பேச வேண்டியதை ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவதாக காங். மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டி உள்ளார். ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடா’ யாத்திரையில் பங்கேற்பது தொடர்பான காங். ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற தமிழக காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: ராகுல்காந்தி கன்னியாகுமரியில் செப்.7ல் நடைபயணம் தொடங்கி காஷ்மீர் வரை செல்ல உள்ளார். இந்த நெடும்பயணம் திருப்பு முனையாக அமையும். பாஜ மாநில தலைவராக அண்ணாமலையை இறக்கி பார்த்தார்கள். அவரிடம் உளறல் இருப்பதால், தற்போது ஆளுநர் ரவியை இறக்கி உள்ளனர்.