பாரிவாக்கம் ஊராட்சியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம்; ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

திருவள்ளூர்: பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் பாரிவாக்கம் ஊராட்சியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் 1738 சதுர அடி பரப்பளவில் புதியதாக அமையவிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் வி.தணிகாசலம் அனைவரையும் வரவேற்றார். சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மா.செந்தில்குமார், பொதுப்பணித்துறை மருத்துவப் பிரிவு உதவி செயற்பொறியாளர் பி.புஷ்பலிங்கம், உதவி பொறியாளர் எம்.மனோகரன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ப.ச.கமலேஷ், மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜி.ரவி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் எம்.முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவிற்கு பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கி ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் 1738 சதுர அடி பரப்பளவில் புதியதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், `இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் பிரிவு கட்டிடம், அவசர சிகிச்சை பிரிவு, ஆண்கள் புற நோயாளிகள் பரிசோதனை அறை, பெண்கள் புற நோயாளிகள் பரிசோதனை அறை, வெளி நோயாளிகள் காத்திருப்பு அறை, ஆண்களுக்கான ஊசி போடும் அறை மற்றும் பெண்களுக்கான ஊசி போடும் அறை ஆகிய வசதிகளுடன் அமைய உள்ளது.

மேலும் நோயாளிகளும் அவர்களுடன் வருபவர்களும் சிரமம் இன்றி சிகிச்சை பெற்றிட தேவையான சாய்தள நடை பாதை வசதி, குடிநீர் வசதி, மற்றும் கழிவறை வசதியுடன் கட்டப்பட உள்ளது. இந்தக் கட்டிடம் செயல்பாட்டிற்கு வரும்போது பாரிவாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் உடனடியாக சிகிச்சை பெற பேரு உதவியாக இருக்கும்’இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில் பாணவேடுதோட்டம் குமரேசன், ஒன்றிய கவுன்சிலர் சிவகாமி சுரேஷ், ஊராட்சி துணைத் தலைவர் பி.கே.ராஜா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரதீபா மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள், பிஎல்எப் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.

Related Stories: