சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் மருது சகோதரர்களுக்கு வெண்கலச் சிலை அமைக்க ஒப்பந்தப்புள்ளி: பொதுப்பணித்துறை சார்பில் அறிவிப்பு.!

சென்னை: சென்னையில் மருது சகோதரர்களுக்கு வெண்கலச் சிலை அமைக்க பொதுப்பணித்துறை சார்பில் ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் சின்ன மருது, பெரிய மருது ஆகியோருக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் செய்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, சுதந்திரப் போராட்டத் தலைவர்கள், தியாகிகள் உள்ளிட்டோருக்கு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ரூ.1 கோடியில் சிலைகள் நிறுவப்படும் என்றார்.

அந்த வகையில், சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுசகோதரர்கள், கடலூரில் சுதந்திரப்போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள், கீழ்பழுவூரில் தியாகிசின்னசாமி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் குடி யரசுத் தலைவர் அப்துல் கலாம், சென்னை ராணி மேரி கல்லூரியில் வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூர், சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் நாவலர் இரா.நெடுஞ்செழியன், மயிலாடுதுறையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், புதுக்கோட்டையில், முத்துலெட்சுமி ரெட்டி, ராணிப்பேட்டையில் தமிழ் அறிஞர் மு.வரதராசனார் ஆகியோருக்கு சிலைகள் அமைக் கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மருது சகோதர்களுக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை சார்பில் தற்போது ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் சின்ன மருது, பெரிய மருது ஆகியோருக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் அறிவித்திருந்த நிலையில், சிலைகளை அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 34 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்த மருது சகோதரர்கள் சிலை அமைக்கப்படும் என்றும் 3 மாதங்களுக்கு உள்ளாக சிலையை நிறுவி முடிக்கவும் பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: