புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் வடவாளத்தில் உள்ள மாமுண்டி கருப்பர் கோயிலில் 22 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். புதுக்கோட்டை மாவட்டம் வடவாளத்தில் மாமுண்டி கருப்பர் கோயில் உள்ளது. இந்த கோயில் அந்த பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த கோயிலாக உள்ளது. இந்த கோயிலில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்றது. இதனையடுத்து இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் திட்டமிட்டிருந்தனர். அதன்படி கடந்த சில ஆண்டுகளாக ரூ.1 கோடி மதிப்பில் இந்த கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்த நிலையில் கடந்த 18 தேதி முதல் கோயில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டது. அதில் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், மகாகணபதி ஹோமம் ஆகிய யாகசாலை பூஜை தொடங்கியது.