தொடர் விடுமுறையால் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது-நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், 3 நாட்கள் தொடர் விடுமுறையால் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அரசு விடுமுறை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

அதன்படி, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்கள் அரசு விடுமுறை தினமாக அமைந்ததால், அண்ணாமலையார் கோயிலில் கடந்த 3 நாட்களாகவே பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், நேற்று ஏராளமான பக்தர்கள்  திரண்டனர். அதிகாலையில் இருந்தே தரிசன வரிசையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பொது தரிசன வரிசை, கோயில் வெளி பிரகாரம் வரை நீண்டிருந்தது. அதனால், சுமார் 2 மணி நேரம் வரிசையில் காத்திருந்து  தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.

பக்தர்கள் வருகை அதிகரித்ததால், சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்துச் செய்யப்பட்டது.

Related Stories: