சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் இன்று கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவிலே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் 33 கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் தமிழத்தில் நடத்தப்பட்டுள்ளன. சென்னையில் நடந்த இந்த மெகா தடுப்பூசி முகாம்களில் இதுவரை 41,26,183 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் 34வது கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதில், ஒரு நிலையான முகாம் மற்றும் 9 நடமாடும் முகாம்கள் என ஒரு வார்டுக்கு 10 முகாம்கள் நடத்தப்படும். அதன்படி சென்னையில் 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்காக ஒரு வார்டுக்கு 5 சுகாதார குழுக்கள் வீதம் 200 வார்டுகளுக்கு 1,000 சுகாதார குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பணிகளில் மாநகராட்சி, காவல்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தெற்கு ரயில்வே துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஈடுபட உள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் 84,810 கோவிஷீல்டு, 2,56,270 கோவாக்சின் தடுப்பூசிகள் மற்றும் 72,900 கார்பெவேக்ஸ் தடுப்பூசிகள் என மொத்தம் 4,13,980 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், இணை நோயுடைய நபர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு வந்தது. தற்போது 75 நாட்களுக்கு, அதாவது செப்.30ம் தேதி வரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி செலுத்த தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சியின் நகர்புற சமுதாய நல மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 2 தவணை தடுப்பூசி செலுத்திய நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம்.

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசியை 2 தவணைகள் செலுத்தி கொண்டு 6 மாதங்கள் அல்லது 26 வாரங்கள் கடந்த நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடையர்கள். இவர்களுக்கு கார்பெவேக்ஸ் தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியாக செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இதுவரை தகுதியடைய 43,05,346 பேரில் 5,08,124 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒன்றிய அரசின் வழி காட்டுதலின்படி, செப்.30ம் தேதி வரை மட்டுமே 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது இலவசமாக செலுத்தப்படும். எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி தகுதியுடைய அனைவரும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டள்ளது.

Related Stories: