தென்காசி அருகே பரபரப்பு நண்பர்கள் உதவியுடன் கணவரை தீர்த்துக் கட்டிய மனைவி கைது; நகைக்காக கொலை நடந்ததாக நாடகம்: 3 பேருக்கு தனிப்படை வலை

சுரண்டை: தென்காசி அருகே நண்பர்கள் உதவியுடன் கணவரை தீர்த்துக் கட்டிவிட்டு நகைக்காக கொலை நடந்ததாக மனைவி நாடகமாடியது அம்பலமானது. தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் அருகே வென்றிலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் வைரவசாமி (31). இவரது மனைவி முத்துமாரி (25). குழந்தை இல்லை. இருவரும் வீரசிகாமணியில் பர்னிச்சர் நிறுவனத்தில் வேலை செய்தனர். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து பைக்கில் வீட்டிற்கு செல்லும் போது, காரில் வந்த மர்மநபர்கள் வைரவசாமியை சரமாரியாக அரிவாளால் வெட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் மர்ம கும்பல், முத்துமாரி அணிந்திருந்த 30 கிராம் நகையை பறித்துக்கொண்டு தப்பியது. தகவலறிந்து சேர்ந்தமரம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அப்போது முத்துமாரி முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் முத்துமாரியை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதில், கணவருக்கும், தனக்கும் ஒத்துப் போகவில்லை. அதனால் நண்பர்கள் மூன்று பேர் உதவியுடன் தீர்த்து கட்ட முடிவு செய்தேன். அதன்படி பணி முடிந்து கிளம்பும் போது, நண்பர்களிடம் தகவல் தெரிவித்தேன். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பைக்கில் வந்த போது திட்டப்படி வழிமறித்து கணவரை கொலை செய்தனர். நகைக்காக கொலை செய்வது போன்று இருந்தால் யாரும் கண்டுபிடிக்கமாட்டார்கள் என்று எண்ணினோம். ஆனால், பதற்றத்தில் உளறியதால் போலீசார் கண்டுபிடித்து விட்டார்கள் என்று வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்ந்து முத்துமாரியை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின் பெயரில் 3 பேரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மனைவியே  நண்பர்கள் மூலம் கணவனை கொலை செய்த சம்பவம் சேர்ந்தமரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: