ஷோ ரூமில் இருந்து ஓட்டி பார்ப்பதாக ஜீப்பை எடுத்துச் சென்ற நபர் எஸ்கேப்: “வடிவேலு காமெடி நிஜமானது’’

அண்ணாநகர்: பாடியில் உள்ள ஒரு ஷோ ரூமில் இருந்து ஓட்டிப்பார்ப்பதாக ஜீப்பை எடுத்துச்சென்ற நபர், வாகனத்துடன் எஸ்கேப் ஆகிவிட்டார். ஒரு திரைப்படத்தில் வரும் காட்சியில் பைக் வாங்க ஒருவர் பேரம் பேசுவார். அப்போது அங்கு வரும் வடிவேலு, ‘’ ஏன் பேரம் பேசுகிறீர்கள். வண்டியை ஓட்டி பார்த்து நல்லாயிருந்த வாங்கிக்கோங்க’ என்று கூறிவார். இதன்படி அந்த நபர், பைக்கை ஒட்டிக்கொண்டு செல்வதுபோல் எஸ்கேப் ஆகிவிடுவாராம். இப்படி ஒரு காட்சி சென்னை திருமங்கலத்தில் நிஜத்தில் அரங்கேறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு; சென்னை பாடி மேம்பாலம் அருகே சாய் கார் செலக்சன் என்ற பெயரில் பயன்படுத்தப்பட்ட கார்களை விற்கும் ஷோரூம் உள்ளது. இதன் உரிமையாளர் சௌந்தரபாண்டியன்(51). இவரது ஷோரூமில் 20க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்கள் உள்ளன.

நேற்று மாலை ஷோரூமுக்கு வந்த ஒருவர், ‘’தனக்கு ஹோண்டா சிட்டி கார் வேண்டும்’’ என கூறியிருக்கிறார்.  இதையடுத்து அந்த காரை டெஸ்ட் டிரைவ் எடுத்து சிறிது தூரம் ஓட்டி இருக்கிறார். அப்போது கார் ஷோருமின் ஊழியர் தனீஷ் என்பவர் உடன் இருந்திருக்கிறார். காரை ஓட்டி பார்த்தபிறகு ஷோரூக்கு காருடன் திரும்பி இருக்கிறார். சிறிது நேரத்தில் ஷோரூமில் இருந்த 90களில் வெளிவந்த ஜீப்பை மறு வடிவம் செய்து விற்பனைக்காக வைத்திருக்கிறார்கள். இதை பார்த்ததும் அந்த நபர், அந்த காரின் விவரங்களை பற்றி கேட்டபோது, ‘’இதனுடைய மதிப்பு 8 லட்சம்’ என்று ஷோரூம் ஊழியர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த கார் தனது மாமாவுக்கு வேண்டும் எனக் கூறிய அந்த நபர், அந்த ஜீப்பையும் டெஸ்ட் டிரைவ்வுக்காக எடுத்துச்சென்றபோதும் அவருடன் கார் ஷோரூம் ஊழியர் தனீஷ் இருந்திருக்கிறார். அங்குள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சென்றதும் ஜீப்பை திருப்பி நிறுத்திவிட்டு அந்த நபர், ‘’மண்டபத்தின் மேனேஜரிடம் மண்டபத்தை புக் செய்து வந்திருப்பதாக தெரிவித்ததுடன் கார் ஷோரூமின் ஊழியர் தனிஷிடம் மண்டப மேனேஜர் தனக்கு நெருங்கிய சொந்தக்காரர் என கூறி அவரை அங்கேயே நிற்கவைத்துவிட்டு ஜீப்பை திருடிசென்றிருக்கிறார்.

இதன்பிறகு கார் திருடப்பட்டதை உணர்ந்த ஊழியர், உடனடியாக அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் விசாரித்தபோதும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று தெரிந்ததும் ஷோ ரூமில் வந்து விவரத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து ஷோரூம் உரிமையாளர் உள்பட பலரும் தேடியும் அந்த நபரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ஷோ ரூம் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து கார் ஷோரூமில் உள்ள சிசிடிவி பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது அது பழுதானது தெரிந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள மற்ற கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஜீப்பை திருடிச்சென்ற நபரை தேடி வருகின்றனர்.

Related Stories: