12ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு ஐஐடி வழங்கும் தொழில் பாதை திட்டம்: பட்டப்டிப்பிற்கான கல்விக் கடனை தாட்கோ வழங்கும்

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் 12ம் வகுப்பு முடித்ததும் ஐஐடி வழங்கும் தொழில் பாதை திட்டத்தில் சேர்ந்து பயிலலாம். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: உலகின் முதல் இளங்கலை தரவு அறிவியலில் பட்டப்படிப்பு திட்டம் மெட்ராஸ் ஐ.ஐ.டி.யால் தொடங்கப்பட்டது, இதில் 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் விண்ணப்பித்து நான்கு ஆண்டு பட்டப்படிப்பு பயிலலாம். செப்டம்பர் 2022ம் ஆண்டிற்கான வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி 21 ஆகஸ்ட் 2022.  www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் சேர 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்த மாணவர்களுக்கு ஐ.ஐ.டி, மெட்ராஸ் மற்றும் தாட்கோ மூலம் அளிக்கப்படும் 4 வார பயிற்சியின் முடிவில் வரும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது.

இத்திட்டத்தில் பயில அறிவியல், மனிதவியல் , வணிகவியல் போன்ற அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் ஒவ்வொரு  நிலையின் முடிவிலும் வெளியேறும் வழிகள் உள்ளன. மேலும் மாணவர்கள் ஒரு அடிப்படைச் சான்றிதழ், ஒன்று அல்லது இரண்டு டிப்ளமோ, அல்லது பட்டப்படிப்புடன் வெளியேறலாம்.

இத்திட்டத்தில் வகுப்புகள் இணையதளம் வழியாகவே நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் தேர்வுகள் நேரில் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் ஒரே நேரத்தில் தங்களது விருப்ப பட்டப்படிப்பினை படித்துக் கொண்டே  ஐ.ஐ.டி., மெட்ராஸ் வழங்கும் Bachelor of Science in Data Science & Applications பட்டப்படிப்பையும் பயிலலாம். இந்த பட்டப்டிப்பிற்கான செலவினை தாட்கோ கல்விகடனாக வழங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: