மரக்காணம் அருகே இசிஆர் சாலையில் பைக் மீது லாரி மோதி சென்னை வாலிபர்கள் 2 பேர் பரிதாப பலி

காலாப்பட்டு :  மரக்காணம் அருகே இசிஆர் சாலையில் மோட்டார் பைக் மீது லாரி மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த 2 வாலிபர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக

உயிரிழந்தனர்.சென்னை திருவான்மியூர் அடுத்த கொட்டிவாக்கம் குப்பம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சிங்காரம் மகன் ராஜமாணிக்கம் (24). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரும், அதே பகுதி பஜனை கோயில் தெருவை சேர்ந்த செல்வகுமார் மகன் யோகேஷ் (27) என்பவரும் இருசக்கர வாகனத்தில் புதுச்சேரிக்கு வந்துவிட்டு நேற்று முன்தினம் இரவு மீண்டும் சென்னை நோக்கி திரும்பி சென்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மஞ்சக்குப்பம் என்ற இடத்தின் அருகே சென்றபோது, எதிரே சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த லாரி எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற பைக் மீது அதிவேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்தில் பலியான ராஜமாணிக்கம், யோகேஷ் ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்கு காரணமாக லாரியை கைப்பற்றி கோட்டக்குப்பம் காவல் நிலையம் கொண்டு சென்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

ஒரு மாதத்தில் 5 பேர் பலி

விபத்து நடந்த மஞ்சக்குப்பம் பகுதியில் தனியார் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலின் எதிரே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சாலையில் பேரிகார்டு வைக்கப்பட்டது. இதன் பின்னர் அங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் இதுவரை 30க்கும்

மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டதில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

Related Stories: