ஆர்ஜேடி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்பட 6 கட்சிகளின் ஆதரவுடன் பீகாரில் நிதிஷ் புதிய கூட்டணி ஆட்சி

* பாஜவுடனான 5 ஆண்டு உறவை முறித்தார்

* 164 எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம்

* இன்று மதியம் பதவியேற்பு விழா

பாட்னா: பீகாரில் பாஜ உடனான 5 ஆண்டு உறவை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார், ஆர்ஜேடி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உட்பட 6 கட்சிகளின் ஆதரவுடன் புதிய கூட்டணி ஆட்சி அமைத்துள்ளார். 164 எம்எல்ஏ.க்களின் ஆதரவுடன் பீகார் முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் இன்று பதவியேற்கின்றனர். பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), பாஜ.வுடன் கூட்டணி சேர்ந்து கடந்த 2017ம் ஆண்டு ஆட்சி அமைத்தது. அதைத் தொடர்ந்து, கடந்த 2020ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ.வுடன் இணைந்து போட்டியிட்ட ஜேடியு, மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது.

ஆனால், அந்த தேர்தலில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி, பாஜ.வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்டதால் ஓட்டுகள் சிதறி, நிதிஷ் கட்சிக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அந்த தேர்தலில் அவரது கட்சி 43 இடங்களில் மட்டுமே வென்றது. பாஜ 74 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட்டுடன் இணைந்து மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்ட லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 75 இடங்களில் வென்றது.

பாஜ புறக்கணிப்பு: குறைவான எண்ணிக்கையில் ஜேடியு வெற்றி பெற்றாலும், நிதிஷ் குமாருக்கு மீண்டும் முதல்வர் பதவியை பாஜ விட்டுக் கொடுத்தது. அப்போதில் இருந்தே ஜேடியு, பாஜ கூட்டணியில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. இதன் காரணமாகவே ஒன்றிய அமைச்சரவையிலும் ஜேடியுக்கு உரிய மரியாதையை பாஜ அரசு தரவில்லை. ஜேடியு தரப்பில் ஆர்சிபி சிங் ஒருவர் மட்டுமே ஒன்றிய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். முதலில் நிதிஷ் குமாரின் விசுவாசியாக இருந்த ஆர்சிபி சிங் பின்னர் ஒன்றிய அரசுக்கு நெருக்கமானார். இதனால், நிதிஷ்-ஆர்சிபி சிங் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

ஆர்சிபி சிங் விலகல்: அதன் காரணமாக, ஆர்சிபி சிங்குக்கு முடிவு கட்டும் வகையில், மாநிலங்களவை எம்பியாக நீடிக்க முடியாத படி, அவருக்கு நிதிஷ் குமார் சீட் தராமல் மறுத்தார். நிதிஷின் இந்த அதிரடி நடவடிக்கையால், எம்பி பதவியை இழந்த ஆர்சிபி சிங் அமைச்சர் பதவியையும் துறக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அதோடு, சொத்து குவிப்பு தொடர்பாக அவர் மீது ஜேடியு கட்சி விசாரணை நடத்தியது. இந்த அதிருப்தியில் கட்சியிலிருந்து ஆர்சிபி சிங் விலகினார். இதற்கிடையே, பாஜ உடனான நிதிஷின் உறவு ஒவ்வொரு காலகட்டத்திலும் மோசமடைந்தது. அக்னிபாதை திட்டம், மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட விஷயங்களில் ஒன்றிய அரசுடன் நிதிஷ் மாறுபட்ட கருத்தை கொண்டிருந்தார்.

அவசர கூட்டம்: மேலும், சமீபத்தில் ஒன்றிய அரசு அழைத்த எந்த நிகழ்ச்சியிலும் நிதிஷ் கலந்து கொள்ளவில்லை. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழா, புதிய ஜனாதிபதி முர்மு பதவியேற்பு, பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் என அனைத்தையும் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தார். எனவே, மகாராஷ்டிரா பாணியில் ஆர்சிபி சிங் மூலமாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சுக்குநூறாக்க உடைத்து, ஆட்சியை பிடிக்க பாஜ சதித்திட்டம் தீட்டுவதாக நிதிஷ் குமாருக்கு தெரிய வந்தது. இதன் காரணமாக, கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றும் பொருட்டு, பாஜ உடனான உறவை முறிக்க முடிவு செய்த அவர், கட்சி எம்பி, எம்எல்ஏக்களின் அவசர கூட்டத்தை கூட்டினார்.

கூட்டணி முறிந்தது: இந்த பரபரப்பான அரசியல் சூழலில் பாட்னாவில் நிதிஷ் குமார் வீட்டில் நேற்று எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில், பாஜ முதுகில் குத்திவிட்டதாக நிதிஷ் குமார் ஆவேசமாக பேசினார். அதே சமயம், பாஜ கூட்டணியிலிருந்து விலகினால், ஆதரவு அளிக்க தயார் என ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் நிதிஷுக்கு ஆதரவு தெரிவித்தன. அக்கட்சிகளும் அவசர ஆலோசனை நடத்தின. இதனால், பீகார் அரசியலில் நொடிக்கு நொடி விறுவிறுப்பு ஏற்பட்டது. பாஜ உடனான கூட்டணியை முறிக்க கட்சியின் அனைத்து எம்எல்ஏக்களும் சம்மதித்ததைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகைக்கு சென்ற நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த இவர், ‘‘இது கட்சி எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்தமாக எடுத்த முடிவு’’

என்றார்.

புதிய கூட்டணி ஆட்சி: அதைத் தொடர்ந்து, ஆர்ஜேடி கட்சி தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ்வுடன் ஆலோசனை நடத்திய நிதிஷ் குமார், மாலையில் மீண்டும் ஆளுநர் பாகு சவுகானை சந்தித்து, மெகா கூட்டணியுடன் இணைந்து புதிய ஆட்சி அமைக்க ஆதரவு கோரினார். ஆர்ஜேடி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட 6 கட்சிகளின் 164 எம்எல்ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக ஆதரவு கடிதத்தையும் அவர் வழங்கினார். அதன் அடிப்படையில் நிதிஷ்குமாரை புதிய ஆட்சி அமைக்கஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி இன்று மதியம் 2 மணிக்கு கவர்னர் நடைபெறும் விழாவில் பீகார் முதல்வராக 8 வது முறை நிதிஷ் பதவியேற் கிறார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்க உள்ளார். ஒரே நாளில் பாஜ உடனான 5 ஆண்டு உறிவை முறித்து விட்டு, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நிதிஷ் புதிய ஆட்சி அமைத்திருப்பது தேசிய அளவில் பரபரப்பாகி உள்ளது. மேலும், பாஜ கூட்டணியை முறித்த நிதிஷின் முடிவை பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.

பீகார் சட்டப்பேரவையில் கட்சிகளின் பலம் என்ன?

மொத்த எம்எல்ஏக்கள்    243

தற்போதுள்ள எம்எல்ஏ.க்கள்

(1 ஆர்ஜேடி எம்எல்ஏ தகுதி நீக்கம்)    242

ஆட்சி அமைக்க தேவையான எம்எல்ஏ.க்கள்    122

மெகா கூட்டணியின் பலம்

ஜேடியு (1 சுயேச்சை உட்பட)    46

ஆர்ஜேடி    79

காங்கிரஸ்    19

சிபிஐ (எம்எல்)    12

சிபிஐ    2

மார்க்சிஸ்ட்    2

எச்ஏஎம்    4

மொத்தம்    164

பாஜ    77

ஏஐஎம்ஐஎம்    1

* கட்சிகளை மிரட்டி வளைக்கும் பாஜ தேஜஸ்வி குற்றச்சாட்டு

நிதிஷ் குமாருடன் கூட்டாக பேட்டி அளித்த தேஜஸ்வி கூறுகையில், ‘‘கட்சிகளை மிரட்டி விலைக்கு வாங்க மட்டுமே பாஜவுக்கு தெரியும். பீகாரில் அந்த திட்டத்தை செயல்படுத்த விடக்கூடாது என்பதே எங்களின் ஒரே நோக்கம். அத்வானியின் ரதத்தை லாலு பிரசாத் எப்படி நிறுத்தினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நாங்கள் எந்த வகையிலும் மனம் மாற மாட்டோம்’’ என்று தெரிவித்தார்.

* சோனியா, ராகுலிடம் பேசினார்

மெகா கூட்டணியுடன் ஜேடியு இணைந்ததைத் தொடர்ந்து நிதிஷ் குமார், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுல் காந்தியிடம் தொலைபேசியில் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்போது, நிதிஷ் குமாருக்கு முழு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

* சிராக், பாஜ கொந்தளிப்பு

லோக் ஜனசக்தி தலைவரும் எம்பியுமான சிராக் பஸ்வான் அளித்த பேட்டியில், ‘நிதிஷ் குமார் மீண்டும் ஒருமுறை மக்கள் தீர்ப்பை அவமதித்துள்ளார். அவர் தன் மீதான நம்பகத்தன்மையை இழந்துள்ளார். ஒரு நேரம் ஒருவருடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது, பின்னர் கூட்டணி மாறி வேறொருடன் ஆட்சி செய்வது.

இதென்ன ஜோக்கா? எனவே பீகாரில் ஜனாதிபதி ஆட்சியை ஆளுநர் அமல்படுத்தி, புதிதாக தேர்தல் நடத்த வேண்டும்,’ என வலியுறுத்தி உள்ளார்.

பாஜ மாநில தலைவர் சஞ்சய் ஜெய்ஷ்வால் அளித்த பேட்டியில், ‘2020ல் மக்கள் அளித்த தீர்ப்பை வஞ்சித்து, நிதிஷ் துரோகம் செய்து விட்டார். இதற்கான தண்டனையை மக்கள் அவருக்கு தருவார்கள்,’ என கொந்தளித்தார்.

* மீண்டும் திரும்பிய மகிழ்ச்சி

கடந்த 1998ல் வாஜ்பாய் காலத்தில் முதலில் ஜேடியு, பாஜ கூட்டணி அமைந்தது. இது அசைக்க முடியாத கூட்டணியாக இருந்தது. 2013ல் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாஜ, ஜேடியு கூட்டணி முறிந்தது. 2015 பீகார் சட்டப்பேரவை தேர்தலில், வலுவான மோடி அலையை வீழ்த்த ஜேடியு, லாலுவின் ஆர்ஜேடி இணைந்த மெகா கூட்டணி அமைக்கப்பட்டது. இக்கூட்டணி அமைய லாலு முக்கிய பங்கு வகித்தார். 2015 தேர்தலில் ஜேடியு, ஆர்ஜேடி கூட்டணி பாஜவை வீழ்த்திய போதிலும், அடுத்த 2 ஆண்டில் இக்கூட்டணி முறிந்தது. மீண்டும் பாஜவுடன் நிதிஷ் இணைந்து 2017ல் புதிய ஆட்சி அமைத்தார். தற்போது 5 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் லாலு கட்சியுடன் நிதிஷ் இணைந்திருப்பதால் லாலுவின் குடும்பத்தினர் மற்றும் கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சி

அடைந்துள்ளனர்.

11 மணி முதல் 6 மணி வரை: அடுத்தடுத்த திருப்பங்கள்

* காலை 11 மணி: ஐக்கிய ஜனதா தளம் எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டம் முதல்வர் நிதிஷ் குமார் வீட்டில் நடந்தது.

* காலை 11.15 மணி: எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது.

* பிற்பகல் 1 மணி: ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகளை கொண்ட மெகா கூட்டணி தலைவர்கள், முன்னாள் முதல்வர் ரப்ரி தேவியை அவரது வீட்டில் சந்தித்து, நிதிஷ் குமாருக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்தனர்.

* பிற்பகல் 2 மணி: பாஜ அல்லாத புதிய கூட்டணிக்கு தலைமை வகிக்க ஜேடியு கட்சி எம்எல்ஏக்கள் நிதிஷ் குமாருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

* மாலை 4 மணி: ஆளுநர் பாகு சவுகானை நிதிஷ் குமார் சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார்.

* மாலை 4.45 மணி: ரப்ரி தேவி வீட்டிற்கு வந்த நிதிஷ் குமார் அங்கு ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவுடன் ஆலோசனை நடத்தினார்.

* மாலை 5.20 மணி: ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரின் கடிதத்துடன் தேஜஸ்வியுடன் இணைந்து ராஜ்பவனுக்கு சென்ற நிதிஷ் குமார் ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டார்.

* மாலை 6 மணி: மெகா கூட்டணியுடன் ஜேடியு இணைந்து புதிய அரசு அமைக்க நிதிஷ் குமார் ஆளுநருடன் உரிமை கோரினார்.

Related Stories: