விடுமுறை நாளான நேற்று அண்ணாமலையார் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்-சிறப்பு தரிசனம் ரத்து

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, விடுமுறை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

அதன்படி, ஞாயிறு விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதிகாலையில் இருந்தே தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசித்தனர். பரவலான தொடர் மழை இருந்தபோதும், வெளியூர் பக்தர்களின் வருகை வழக்கம்போல நேற்றும் அதிகரித்தே காணப்பட்டது.கொரோனா தொற்று பரவல் காரணமாக, வெளி நாட்டு பக்தர்களின் வருகையும் கடந்த 2 ஆண்டுகளாக குறைந்திருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக வெளிநாட்டு பக்தர்கள் வருகை தொடங்கியிருக்கிறது. அதன்படி, நேற்றும் வெளி நாட்டு பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகை அதிகரித்திருந்ததால், நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்ப்பதற்காக, அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

Related Stories: